இறக்குமதி செய்யப்படும் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் (S$273 பில்லியன்) மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது நேற்று முதல் அமெரிக்கா 25% வரி விதித்துள்ளது. முன்பு அது 10 விழுக்காடாக இருந்தது.
கூடுதல் வரிவிதிப்பு குறித்து வருத்தம் தெரிவித்த சீனா, அதனைக் கையாளு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டது.
இதன் காரணமாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு இந்த வரி அதிகரிப்பு பற்றி தெரிவிக்கப்பட்டது. 5,700 வகையான பொருட்கள் மீது இந்தக் கூடுதல் வரிவிதிப்பு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவுடனான அமெரிக்காவின் இரண்டு நாள் வர்த்தகப் பேச்சுவார்த்தை கள் வாஷிங்டனில் நேற்று முன்தினம் தொடங்கின. சீனாவின் துணைப் பிரதமர் லுய் ஹி பேச்சுவார்த்தைகளுக்காக அங்கு சென்றுள்ளார்.
முதல்நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை தொடர இருப்பதாகக் கூறப்பட்ட வேளையில் இந்தக் கூடுதல் வரிவிதிப்பு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் நியாயமற்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளைச் சமாளிக்க அமெரிக்க அதிபர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்று உபகரணத் தயாரிப்புச் சங்கத்துக்கான அரசாங்க விவகாரங் களின் துணைத் தலைவர் கிப் ஐடிபெர்க் கூறியுள்ளார்.
"கூடுதல் வரிவிதிப்பு காரணமாக ஏற்றுமதிகள் குறைவதுடன் உபகரணத் தயாரிப்புத் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 400,000 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். அமெரிக்க வர்த்தகங்கள், விவசாயிகள், சமூகங்கள், குடும்பங்கள் ஆகியவை சீனாவின் எதிர் நட வடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகும்," என்றும் அவர் கூறினார்.
தளவாடங்கள், விளக்குகள், வாகன உதிரி பாகங்கள், கட்டுமானப் பொருட்கள் போன்றவை அதிக வரிவிதிப்புக்கு உள்ளான பொருட்களின் பட்டியலில் உள்ளன.
இணையக் கட்டமைப்புக் கருவிகள், தரவு கடத்தும் கருவிகள், மின்னணுவியல் சுற்று போன்ற பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதல் வரிவிதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
வரிவிதிப்பு காரணமாக அமெரிக்கப் பங்கு வர்த்தகம் சரிவைச் சந்தித்த வேளையில் ஆசியப் பங்குகள் ஏற்றம் கண்டன.
சீனாவின் பங்குச் சந்தைகளுக்கு நேற்று விடுமுறையாக இருந்ததால் அங்கு வரிவிதிப்பின் தாக்கத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

