மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, தமது திறன்பேசியிலுள்ள அனைத்து அம்சங்களையும் புரிந்துவைத்திருக்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். அத்தகைய புதிய தொழில்நுட்பக் கருவிகள் தமக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன என்றும் 93 வயது டாக்டர் மகாதீர் வெளிப்படையாகக் கூறினார். "என்னைப் போன்ற வயதானவர்களுக்கு இன்றைய தொழில்நுட்பம் சுலபமன்று. புதிய தொழில்நுட்பங்களில் பல எனக்கு இன்னமும் தெரியாது," என்றார் டாக்டர் மகாதீர்.
தனது திறன்பேசியிலுள்ள அனைத்து அம்சங்களையும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்று சுல்தான் அப்துல் ஹமித் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இரவு விருந்தில் பேசியபோது அவர் கூறினார். மின்னியல் சாதனம் ஒன்றைப் பற்றி பத்து வயது சிறுமியிடம் கற்றுக்கொண்டதை டாக்டர் மகாதீர் அந்நிகழ்ச்சியின்போது நினைவுகூர்ந்தார்.
"இதுதான் நாம் வாழும் புதிய உலகம்," என்று கூறிய டாக்டர் மகாதீர், காலத்திற்கு ஏற்றவாறு திறன்களை மேம்படுத்திக்கொள்ளத் தவறுவோர் பின்தங்கிவிடுவர் என எச்சரித்துள்ளார்.