வாட்ஸ்அப் செயலியில் உள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னியல் சாதனங்களில் ஊடுருவிகள் கண்காணிப்பு மென்பொருட்களைப் பதிய முயன்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் குறிப்பிட்ட சில பயனீட்டாளர்களை மட்டும் குறிவைத்துத் திறன்பெற்ற ஊடுருவிகள் இதைத் தாக்குதலை மேற்கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிவைக்கப்பட்ட நபர்களுக்கு ஊடுருவிகள் 'வாட்ஸ்அப்'
அழைப்பு கொடுத்து அதன் மூலம் செயலியைக் கண்காணிக்கும் மென்பொருள் அந்நபர்களின் கைபேசியில் புகுத்துவர். பதிவிறக்கப்பட்ட மென்பொருள் வழியாக அதன்பின் ஊடுருவிகள் கைபேசியைத் தொடர் கண்காணிப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய ஊடுருவல்களிலிருந்து 'வாட்ஸ்அப்' பயனீட்டாளர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க, அச்செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை 'வாட்ஸ்அப் நிறுவனம்' கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அச்செயலியின் புதிய பதிப்பிற்கு புதுப்பித்துக்கொள்ளுமாறு (அப்டேட்) உலகம் முழுவதும் தனது 1.5 பில்லியன் பயனீட்டாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ள அந்நிறுவனம், அண்மையில் வெளியான வாட்ஸ்அப் 'அப்டேட்'டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதாக கூறியது.