'737 மேக்ஸ்' ரக விமானங்களின் தொடர்பில் போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனம் செய்துள்ள தவறுகள் திருத்தப்படவேண்டும் என்று 'சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்' குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேரி கெல்லி, தமது நிறுவனப் பங்குதாரர்களிடம் தெரிவித்துள்ளார். இரண்டு விமான விபத்துகள் நடந்தபோதும் அந்த விமானங்கள் விரைவில் மீண்டும் செயல்படும் என நம்புவதாக அவர் அப்போது கூறினார்.
இந்த '737' விமானங்களை மட்டுமே பறக்கவிடும் சவுத்வெஸ்ட் நிறுவனம், உலகில் 'மேக்ஸ்' வகையைச் சேர்ந்த விமானங்களை இயக்கும் ஆகப் பெரிய நிறுவனமாக உள்ளது. குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட 'மேக்ஸ்' விமானங்களின் சேவை, இரண்டு விபத்துகளைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. அந்த விபத்தில் ஒன்று இந்தோனீசியாவிலும் மற்றொன்று எத்தியோப்பியாவிலும் நடந்தன.
இதன் விளைவாக 160 தினசரி விமானப் பயணங்களை சவுத்வெஸ்ட் நிறுவனம் ரத்து செய்தது. இதற்கிடையே, போயிங் விமானங்கள் தொடர்பான ஆபத்துகள் குறித்து அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகள் போயிங் நிறுவனத்திடமே கடந்தாண்டு நவம்பர் மாதம் பேசியதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பிரச்சினையைச் சரிசெய்ய உறுதி கூறிய போயிங் நிறுவனம் நடவடிக்கை எடுக்காததால் எத்தியோப்பிய விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

