வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து அமெரிக்க கணினிக் கட்டமைப்புகளைப் பாதுகாக்க அந்நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப் அவசரநிலையை அறிவித்திருக்கிறார். இதன் தொடர்பில், அமெரிக்காவுக்குப் பாதுகாப்பு அபாயத்தை விளைவிக்கக்கூடிய வெளிநாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதைத் திரு டிரம்ப், அதிபர் உத்தரவு வாயிலாகத் தடை செய்துள்ளார்.
தடை உத்தரவில் எந்த நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சீனாவின் 'ஹுவாவெய்' நிறுவனத்தை இந்த உத்தரவு குறிவைப்பதாகத் திரு டிரம்ப் தெரிவித்தார். ஹுவாவெய்' நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கருவிகளின் வழி சீன அரசாங்கம் மற்ற நாடுகளை வேவு பார்க்கக்கூடும் என்ற அக்கறைகளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வெளிப்படுத்தின. அக்கறைப்பட அவசியமில்லை என்றும் தன்னால் எந்த நாட்டுக்கும் பாதுகாப்பு மிரட்டல் இல்லை என்றும் சொல்கிறது 'ஹுவாவெய்' நிறுவனம். தேவைப்பட்டால் உலக அரசாங்கங்களின் மீது உளவு பார்க்கத் தடை செய்யும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் தாம் தயார் என்று அதன் தலைவர் லியாங் ஹுவா தெரிவித்தார்.
அமெரிக்காவின் தகவல், தொடர்பு தொழில்நுட்பக் கட்டமைப்பு, சேவைகள் ஆகியவற்றின் பலவீனங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி புதிய பலவீனங்களை உருவாக்கி வரும் எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதே திரு டிரம்ப்பின் அதிபர் உத்தரவின் நோக்கம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. திரு டிரம்ப்பின் முடிவை வரவேற்ற மத்திய தொடர்பு ஆணையத்தின் தலைவர் அஜித் பை, "அமெரிக்காவின் கட்டமைப்புகளைக் கட்டிக்காக்க இது முக்கியமான படி," என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்நடவடிக்கை தொடர்பில் சீனாவின் எதிர்வினை எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த அச்சத்தில் உலக வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் உள்ளனர்.
2016ஆம் ஆண்டில் அதிபர் பதவியை ஏற்றதற்கு முன்னரே சீனாவின் வர்த்தகச் செயல்பாடுகளைப் பற்றி குறைகூறி வந்த திரு டிரம்ப், கடந்த வாரம் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன இறக்குமதிகள் மீதான வர்த்தக வரிகளைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயர்த்தினார். இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் திரு டிரம்ப் திடீரென இதனைச் செய்தது சீனாவுக்குப் பெரும் காட்டத்தை ஏற்படுத்தியது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க இறக்குமதிகள் சிலவற்றின் மீதான வர்த்தக வரியை உயர்த்தியது.
ஜப்பானில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை வரும் 'ஜி20' உச்சநிலைக்கூட்டத்தில் தாம் சந்திக்கக்கூடும் என்றார் திரு டிரம்ப்.