கொழும்பு: இலங்கையில் இவ் வாரம் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு தீவிர மதப்பற்றுக்கொண்ட பௌத்த குழுக்கள் காரணமாக இருக்கலாம் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்தது.
இலங்கையில் ஈஸ்டர் நாளன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு தலுக்குப் பழிவாங்கும் நடவடிக் கையாக பௌத்த குழுக்கள் செயல்பட்டிருக்கலாம் என்றும் அது குறிப்பிட்டது.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்கு தலுக்கு ஐஎஸ் பொறுப்பு ஏற்றுக் கொண்டது. தேவாலயங்கள், ஹோட்டல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 250 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
இதனால் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு நகரங்களில் புகுந்த கும்பல்கள் பள்ளிவாசல்களில் நுழைந்து சூறையாடியது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும் பெட் ரோல் நிலையங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இதையடுத்து கலவரத்தில் ஈடு பட்டதாக சந்தேகிக்கப்படும் 78 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் மூவர் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் என நம்பப்படுகிறது.
இதற்கிடையே நாட்டின் பாது காப்பு குறித்து பேசிய அமைச்சர் நவின் திஸ்ஸனாயகே, "முஸ்லிம் கடைகளும் வீடுகளும் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித் தார். அமித் வீரசிங்கே, நமல் குமாரா, டான் பிரியாசாத் ஆகி யோர் தலைமையில் செயல்படும் மூன்று பௌத்த தீவிரவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று அவர் கூறி னார். செவ்வாய்க்கிழமை இவர்கள் மூவரும் கைது செய்யப் பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதில் பிரியாசாத் புதன்கிழமை அன்று பிணையில் விடுவிக்கப் பட்டதாகவும் வீரசிங்கே மே 28ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. நமல் குமாரா பற்றி தகவல் இல்லை.