பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள சுங்கை சிப்புட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பாலியல் புகார் செய்யப்பட்டுள்ளது.
திரு கேசவன் சுப்பிரமணியம் தமக்குப் பாலியல் ரீதியாக தொல்லை விளைவித்ததாக அவரது முன்னாள் உதவியாளர் எனக் கூறிக்கொள்ளும் பெண் ஒருவர் புகார் செய்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த திரு கேசவன் மறுத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொண்டூழியராக சேவையாற்ற அந்தப் பெண் தம்முடன் தொடர்புகொண்டதாக திரு கேசவன் கூறினார்.
அப்போது அவர் ஹுதான் மெலின்தாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
"நான் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரானபோது தொண்டூழியர் என்ற முறையில் எனக்கு உதவி செய்ய விரும்புவதாக அந்தப் பெண் என்னிடம் தெரிவித்தார்.
"அப்போது அவர் என்னிடமும் எனது மனைவியிடமும் நட்புடன் பழகினார். மலாக்காவுக்கு அவருடன் உல்லாசப் பயணம் செல்ல என்னையும் எனது மனைவியையும் அழைத் திருந்தார்," என்று திரு கேசவன் கூறினார்.
ஆனால் அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் தம்மை ஒவ்வொரு நாளும் தொலைபேசி மூலம் அழைத்ததாகவும் அவ ருடன் பேசாவிட்டால் கோபம் அடைந்ததாகவும் திரு கேசவன் தெரிவித்தார்.
காலப்போக்கில் அந்தப் பெண்ணுக்கு தம்மீது காதல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
தம்மீது குற்றம் சுமத்திய பெண்ணுக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதாக திரு கேசவன் தெரிவித்தார்.
அந்தப் பெண் தம்மைப் பற்றி மற்ற கெஅடிலான் தலைவர்களிடம் புகார் செய்ததாகவும் திரு கேசவன் கூறினார்.
"இதுகுறித்து போலிசாரிடம் புகார் செய்ய கெஅடிலான் தலைவர் ஒருவர் எனக்கு ஆலோ சனை வழங்கினார். அந்தப் பெண் எனக்குத் தொல்லை கொடுப்பதாக இம்மாதத் தொடக்கத்தில் நான் போலிசில் புகார் செய்தேன்," என்றார் திரு கேசவன்.
அந்தப் பெண் தமக்கு அனுப்பிய குறுந்தகவல்களை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
"நான் அவரைப் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உண்மையாக இருந்தால் அவர் ஏன் தொடர்ந்து என்னை ஒவ்வொரு நாளும் தொலைபேசி யில் அழைக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார் திரு கேசவன்.
அந்தப் பெண் மீது இரக்கப்பட்டதால் அவருக்கு எதிராக முதலில் புகார் செய்யவில்லை என்று திரு கேசவன் தெரிவித்தார்.