பெட்டாலிங் ஜெயா: சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் குற்றங்களைப் புரிபவர்களுக்கு மேலும் கடுமையான தண்டனைகளை மலேசியா விதிக்க இருக்கிறது.
மாற்றி அமைக்கப்பட இருக்கும் சட்டத்தின்படி சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் குற்றச் செயல்களைப் புரிவோருக்கு 5 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அண்மையில் ஜோகூரில் உள்ள கிம் கிம் ஆற்றில் நச்சு ரசாயனம் வீசப்பட்டதை அடுத்து, பாசிர் கூடாங்கில் 4,000க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல், மற்ற நாடு களிலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகளும் சர்ச்சையை ஏற்படுத் தியுள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மலேசியாவின் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
சுற்றுப்புறத் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கையை நடைமுறைப்படுத் தாதவர்களுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் அபராதம், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்வோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் அதைத் தொடர்ந்து செய்தால் அவர்களுக்கு நாள்தோறும் 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
திறந்த வெளியில் பொருட்களை எரித்தால் 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
மலேசியாவின் நீர்வளங்களில் எண்ணெய்யைக் கசியவிடுவோருக்கு 5 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் கழிவுகளை வீசவோ, விநியோகம் செய்யவோ, வேறு இடத்துக்கு மாற்றவோ கூடாது என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டு உள்ளது.
1974ஆம் ஆண்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட சுற்றுப்புற தரச் சட்டத் துக்குப் பதிலாக புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்ப, சுற்றுப்புற, பருவநிலை மாற்ற அமைச்சு செயல் பட்டுக்கொண்டிருப்பதாக இம்மாதம் 2ஆம் தேதியன்று அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்தார்.
புதிய சட்டத்தின்கீழ் ஆலைகளின் உரிமையாளர்களையும் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களில் உள்ளோரையும் சுற்றுப்புறத் தணிக்கை செய்யுமாறு சுற்றுப்புறத்துறை தலைமை இயக்குநர் உத்தரவிடலாம்.
சுற்றுப்புறத்துக்கு மிரட்டலாக இருக்கும் இடங்களில் வேலை நிறுத்த உத்தரவைப் பிறப்பிக்க புதிய சட்டம் வழிவகுக்கும்
உத்தரவை மீறுபவர்களுக்கு 500,000 ரிங்கிட் வரை அபராதம், ஐந்தாண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.