அமெரிக்காவின் ஒக்லஹோமா மற்றும் டெக்சஸ் மாநிலங்களிலுள்ள இரண்டு மில்லியன் மக்களைச் சூறைக்காற்று பாதிக்கலாம் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது. சூறைக்காற்றால் கடுமையான ஆலங்கட்டி மழை, பெருவெள்ளம், புயல்காற்று ஆகியவை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஒக்லஹோமா மாநிலத்தின் வட-மத்தியப் பகுதியில் அந்தச் சூறைக்காற்று ஏற்கெனவே சில இடங்களைத் தாக்கியிருப்பதைக் காட்டும் காணொளிகளை மாநிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. டெக்சஸ் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியிலும் இதுபோன்ற தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒக்லஹோமாவில் பள்ளிகளில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அங்குள்ள மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகின்றனர்.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அலபாமா மாநிலத்தில் நிகழ்ந்த இதுபோன்ற சூறைக்காற்று தாக்குதலில் குறைந்தது 23 பேர் மாண்டனர்.

