இந்தோனீசியப் பொதுத்தேர்தலின் முடிவுகளை ஏற்க மறுப்பதாக அதில் தோல்வியடைந்த வேட்பாளர் பிரபோவோ சுப்பியாண்டோ தெரிவித்திருக்கிறார். அந்நாட்டின் தேர்தல் ஆணையம் திரு ஜோக்கோ விடோடோவின் வெற்றியை அறிவித்ததை அடுத்து திரு பிரபோவோ இவ்வாறு கூறினார்.
பொதுத்தேர்தலில் அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திரு சுப்பியாண்டோவைத் தோற்கடித்து தமது பதவியைத் தக்கவைத்துள்ளார். கடந்த அதிபர் தேர்தலைக் காட்டிலும் இரண்டு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் திரு விடோடோ திரு பிரபோவோவை வென்றுள்ளார்.
திரு விடோடோ 55.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதாகவும் திரு சுப்பியாண்டோ 44.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதாகவும் இந்தோனீசிய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (மே 21) காலை தெரிவித்தது.
34 மாநிலங்களில் திரு விடோடோவுக்கு 21 மாநிலங்களில் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன. மேற்கு ஜாவா, ஆச்சே, பான்டேன் ஆகிய இடங்களில் திரு பிரபோவோவுக்கான ஆதரவு இன்னும் பலமாக உள்ளது. இந்த முடிவு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.