ஜகார்த்தாவில் தொடரும் கலவரம்; விடோடோ எச்சரிக்கை

ஜகார்த்தாவில் தொடரும் கலவரம்; விடோடோ எச்சரிக்கை

2 mins read
2ed53313-ca77-4c7b-a757-0dde4f27868d
-

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கலவரம் இரண்டாவது நாளாகத் தொடர்கையில், ஜனநாயகத்தைக் குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ எச்சரித்துள்ளார். முழுமையான பாதுகாப்புக் கவசங்களை அணிந்தவண்ணம் போலிசார் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். கற்கள், பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிசார் மீது வீசியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 17ஆம் தேதியன்று நடந்த இந்தோனீசியப் பொதுத் தேர்தலில் திரு விடோடோ 55.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இவ்வாரம் அறிவித்திருந்தது. திரு விடோடோவுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோற்ற முன்னைய ராணுவத் தலைவர் பிரபோவோ சுப்பியாண்டோ, தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து பிரபோவோவின் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் கும்பல்கள் ஜகார்த்தாவின் பல்வேறு பகுதிகளில் பொதுச்சொத்தை நாசப்படுத்தி வருகின்றனர். கடைகளின் கண்ணாடி சன்னல்களை உடைப்பது, கார்களைத் தீ வைத்துக் கொளுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட இவர்கள் சாதாரண பொதுமக்கள் அல்லர் என்பது அதிகாரிகளின் அனுமானம். பணத்தைப் பெற்று இந்தக் கும்பல்கள் வேண்டுமென்றே சட்ட ஒழுங்கைக் குலைக்க நினைப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. கலவரத்தில் இதுவரை ஆறு பேர் மாண்டதாகவும் 200 பேர் காயமடைந்ததாகவும் போலிசார் கூறுகின்றனர். இந்தோனீசியாவின் பாதுகாப்பு, ஜனநாயகம், ஒற்றுமை ஆகியவற்றுக்குக் கெடுதல் விளைவிக்கும் எவரையும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்று திரு விடோடோ எச்சரித்துள்ளார். சட்டத்தின்படி போலிசாரும் ராணுவத்தினரும் இதனைக் கையாளப்போவதாக அவர் கூறினார். முன்னாள் அதிபர் சுகார்த்தோ 1998ஆம் ஆண்டில் பதவியில் இருந்தபோது நிலவிய பதற்றமான சூழலுக்கு நிகரான நிலையை ஜகார்த்தா இப்போது எதிர்நோக்குவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.