இந்தோனீசியப் பொதுத் தேர்தலின் முடிவுகளின் அறிவிப்புக்கு அடுத்து ஜகார்த்தா நகரில் நடந்த கடுமையான கலவரத்தில் நான்கு பேர் குத்திக் கொல்லப்பட்டதாக அந்நாட்டுப் போலிசார் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் மொத்தம் அறுவர் மாண்டனர்.
எஞ்சிய இருவரின் மரணத்திற்கான காரணத்தை விசாரித்து வருவதாக போலிஸ் பேச்சாளர் ஆர்கோ யுவோனோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று காலை, ஜகார்த்தாவின் மேற்குப்பகுதியிலுள்ள போலிஸ் அதிகாரிகள் தங்குமிடங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதாக திரு ஆர்கோ கூறினார். “சம்பவ இடத்தில் பல்வேறு ஆயுதங்கள் காணப்பட்டன. இதனை நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,” என்றார் அவர். இரண்டு நாட்களாக நடந்த கலவரத்தில் 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். புதன்கிழமை இரவு நிலவரப்படி சம்பவத்தின் தொடர்பில் 257 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோரில் இருவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி யுள்ளதாக இந்தோனீசிய போலிசார் தெரிவித்தனர். அவ்விருவரும் இந்தோனீசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.