பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி பதவி விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அவரை சொந்தக் கட்சியினர் பலர் பதவி விலகக் கோரியதைத் தொடர்ந்து திருமதி மே, பிரிட்டனின் அதிகாரபூர்வ பிரதமர் இல்லத்திற்கு வெளியே தமது முடிவை கண்ணீர் மல்க அறிவித்தார்.
‘பிரெக்சிட்’ எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்தின் தொடர்பில் திருமதி மே வகுத்திருந்த எந்த ஒப்பந்தத்திற்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிட்டவில்லை. ஆட்சியும் பெரும்பான்மையும் அவரது கட்சியின் வசம் என்றாலும் திருமதி மேயின் முயற்சிகள் அனைத்தையும் அவரது சொந்தக் கட்சியினரில் ஒரு பிரிவினர் தொடர்ந்து முறியடித்தனர்.
எந்த ஒப்பந்தமுமின்றி பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று நினைக்கும் ஒருசாராரும் பிரிட்டன் ஒன்றியத்தைவிட்டு விலகவே கூடாது என்ற மற்றொரு சாராரும் ஒருவருக்குகொருவர் விட்டுக்கொடுக்க மறுப்பதால் தெரேசா மேயின் கட்சி மட்டுமின்றி, நாடும் ஆழமாகப் பிளவுபட்டுள்ளது.
“பிரெக்சிட் திட்டத்தைப் புதிய பிரதமர் ஒருவர் வழிநடத்துவது நாட்டுக்கு நல்லது என்பது எனக்குத் தெளிவாகப் புலப்படுகிறது. எனவே, நான் ஜூன் மாதம் 7ஆம் தேதி பதவி விலகுவதாக இன்று அறிவிக்கிறேன்,” என்றார் திருமதி மே.