அபு சாயஃப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சில கிளர்ச்சியாளர்கள் ஃபிலிப்பீன்ஸிலுள்ள ஜோலோ தீவில் ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஜோலோவிலுள்ள பெரியவர்களும் ராணுவ அதிகாரிகளும் கலந்துரையாடும் நேரத்தில் 30 கிளர்ச்சியாளர்கள் திடீரென நுழைந்து கூடியிருந்த அனைவரையும் தாக்க ஆரம்பித்தனர். ராணுவ அதிகாரிகள் பதிலுக்குத் தாக்கியதில் ஆறு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். அந்நேரத்தில் ஊர்மக்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டதாக ஃபிலிப்பீன்ஸ் ராணுவப் படையின் சிறப்புப் படை கேப்டன் ஜேமி அபிபாஸ் தெரிவித்தார். "மக்களைப் பயமுறுத்துவதற்காகவே அபு சாயஃப் அமைப்பினர் இவ்வாறு செய்துள்ளனர்," என்று கேப்டன் அபிபாஸ் கூறினார். ஜோலோவில் தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு இச்சம்பவம் நேர்ந்துள்ளது. தேவாலய குண்டுவெடிப்பில் 23 பேர் மாண்டதுடன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
தென் ஃபிலிப்பீன்ஸ்: பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு பிள்ளைகள் பலி
1 mins read
ஃபிலிப்பின்சின் மராவி பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஈராண்டுக்கு முன்னர் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் இன்னமும் புதுப்பிக்கப்படவில்லை. (படம்: ஏஎஃப்பி) -

