கொழும்பு: இலங்கை ராணுவம் கடந்த நான்கு நாட்களில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் கிட்டத்தட்ட 100 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது.
இலங்கையில் ஈஸ்தர் தினத்தன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர். அதனையடுத்து பயங்கரவாதிகளைத் துடைத்தொழிக்கும் நடவடிக்கையை இலங்கை ராணுவம் முடுக்கிவிட்டுள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சென்ற வியாழக் கிழமையில் இருந்து ஏறக்குறைய 3,000 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு மூன்று நாட்களில் 87 சந்தேகப் பேர்வழிகள் கைதுசெய்யப்பட்டு மேல் விசாரணைக்காக போலிசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 100 பேரும் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் உள்ளூர் ஜிகாதி மற்றும் தவ்ஹீத் ஜமாத் ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடம் இருந்து தீவிரவாதப் பரப்புரைகளைக் கொண்ட காணொளிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு இலங்கையில் செயல் பட்டு வரும் தீவிரவாதக் குழு ஒன்று பொறுப்பு ஏற்பதாக அறிவித்திருந்தது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்பின் பல பகுதிகளில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் முஸ்லிம்களின் கடைகளின் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன.
கொழும்பிற்கு வடக்கு மற்றும் வடமேற்கில் உள்ள அப்பகுதிகளிலும் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பலரைக் கைது செய்தனர்.
ஏப்ரல் 21 தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் உள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை ஒடுக்கும் வகையிலும் ராணுவத்தினர் நட வடிக்கை மேற்கொண்டுள்ளனர்.