தவற்றைத் தட்டிக்கேட்ட மாணவி எரித்துக் கொலை

தவற்றைத் தட்டிக்கேட்ட மாணவி எரித்துக் கொலை

1 mins read
8d943d8d-7dee-4215-bf24-121ba0f76308
பரிதாபமாகக் கொலை செய்யப்பட்ட மாணவி நுஸ்ராத் ஜஹான் ரஃபிக்கு நியாயம் கேட்க பெண்ணுரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.(படம்: இபிஏ) -

இஸ்லாமியப் பள்ளி ஒன்றில் ஓர் இளம்பெண் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பங்ளாதேஷ் போலிசார் 16 பேர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். 'சொனகாஸி' பள்ளியில் தாக்கப்பட்ட 19 வயது மாணவி நுஸ்ராத் ஜஹான் ரஃபி ஏப்ரல் 10ஆம் தேதி தீக்காயங்களுக்குப் பலியானார். பள்ளியின் முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்ததாக நுஸ்ராத் முன்னர் புகார் அளித்திருந்தார். அப்போது ஒரு நாள் அந்தப் பெண்ணை இரண்டு மாணவர்கள் பள்ளியின் மேல் மாடிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காத்திருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், புகாரை மீட்டுக்கொள்ளும்படி நுஸ்ராத்திடம் கோரினார். நுஸ்ராத் உறுதியாக அதனை மறுத்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணைக் கட்டிப்போட்டு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி அவரைத் தீயிலிட்டதாக பங்ளாதேஷ் போலிசார் கூறினர். அந்நேரத்தில் மாணவர்கள் சிலர் பள்ளியைச் சுற்றி நின்று ஆசிரியருக்காகக் காவல் காத்ததாகக் கூறப்படுகிறது. நுஸ்ராத்தின் உடலின் 80 விழுக்காட்டுப் பகுதி தீயால் காயமடைந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றத்தைச் செய்ததைப் பள்ளி முதல்வர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர். அவரும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 15 பேரும் மரண தண்டனையை எதிர்நோக்கலாம். இந்தச் சம்பவம் பங்ளாதே‌ஷில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதி உடனடியாக நிலைநாட்டப்படவேண்டும் என்று கோரி மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பாலியல் தொல்லை தொடர்பான விவாதங்களை இந்தச் சம்பவம் கிளப்பியிருக்கிறது.