மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது ஹுவாவெய் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார். அமெரிக்கத் தொழில்நுட்பங்களைக் காட்டிலும் அதிகமான பலன்களை வழங்கும் ஹுவாவெய்யின் கருவிகளை முடிந்தவரை பயன்படுத்தப்போவதாக டாக்டர் மகாதீர் தோக்கியோவில் இன்று கூறினார்.
ஹுவாவெய் நிறுவனம், சீன அரசாங்கத்தின் உளவுப் பணிகளுக்குக் கைகொடுப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. ஹுவாவெய்க்கு எதிராக அமெரிக்கா நட்பு நாடுகளைத் திருப்பும் முயற்சிகள் சில நாடுகளில் தோற்றுள்ளதை இது காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் வர்த்தகப் பதற்றநிலையை ஹுவாவெய் விவகாரம் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் எம்1 நிறுவனம் ஹுவாவெய்யுடன் செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறிய அதே வேளையில் 5ஜி தொழிற்நுட்பச் சேவையை வழங்க வேறு நிறுவனங்களையும் கருத்தில் கொள்ளும் என்று சொன்னது.
கடந்த மாதம் ஹுவாவெய் நிறுவனத்தை நேரடியாகப் பார்வையிட்ட டாக்டர் மகாதீர் , அந்நிறுவனம் தொழில்நுட்பத்தில் மிகவும் முற்போக்குடன் இருப்பதாகக் கூறினார்.