வரிவிதிப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தவிர்க்க அமெரிக்காவும் மெக்சிகோவும் இணங்கி உள்ளன. மத்திய அமெரிக்காவின் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பாதுகாப்புப் படைகளை குவிக்கப்போவதாக மெக்சிகோ ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அதன் மீதான வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தள்ளிவைத்துள்ளார்.
அமெரிக்க--=மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்காவிட்டால் அமெரிக்காவில் இறக்குமதியாகும் மெக்சிகோ பொருட்களுக்கு நாளை திங்கட்கிழமை முதல் ஐந்து விழுக்காடு வரிவிதிக்கப்போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மெக்சிகோ இறங்கி வந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டது.
அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் நாடுவோரை தமது நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் திட்டத்தை இருநாட்டு எல்லை முழுவதும் விரைந்து நீட்டிக்க மெக்சிகோ ஒப்புக்கொண்டது.
இருநாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கை இதனைத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து திரு டிரம்பும் அது குறித்து கருத்துத் தெரிவித்தார். சட்டவிரோதக் குடியேறிகளைக் குறைக்க அல்லது தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க மெக்சிகோ ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
“எனவே அமெரிக்காவால் திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்பட இருந்த வரிவிதிப்பு காலக்கெடு எதுவுமின்றி தள்ளிவைக்கப்படுகிறது,” என்று திரு டிரம்ப் வெள்ளிக்கிழமை மாலை தமது டுவிட்டரில் அறிவித்தார். தனது தென் பகுதி எல்லை வழியாக நுழையும் சட்டவிரோத குடியேறிகளால் அமெரிக்கா அதிக எரிச்சலடைந்து வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வரிவிதிப்பை திரு டிரம்ப் கையில் எடுத்தார். அவர் தமது பதவிக்காலத்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதில் முக்கியத்துவம் காட்டி வருகிறார். அடுத்த ஆண்டு டிரம்ப் மீண்டும் அதிபராக வெற்றிபெற சட்டவிரோதக் குடியேறிகளின் விவகாரத்திற்குத் தீர்வு காண்பது முக்கியமானது.