ஹாங்காங்கில் நீடித்துவரும் பதற்றநிலை நேற்று உச்சகட்டத்தை அடைந்தது.
வரலாறு காணாத அளவில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டு சர்ச்சைக்குரிய மசோதாவை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலகக் கோரியும் கோஷமிட்டு வருகின்றனர்.
நேற்றைய எதிர்ப்புப் பேரணிக்குப் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையிலிருந்து வெளியேறவில்லை. இன்றும் நீடிக்கும் பேரணியால் அரசாங்க அலுவலகங்கள் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
போலிசாரின் கட்டளையையும் மீறி அட்மிரல்டி பகுதியில் இரவு முழுவதும் வீதிகளிலேயே பல ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்துவருகின்றனர்.
அட்மிரல்டி பகுதியில் சாலை மறியல்களால் கிட்டத்தட்ட 70 பேருந்து சேவைத் தடங்கள் இன்று பாதிக்கப்பட்டன.
அவற்றில் 10 பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு மற்ற தடங்கள் சேவைகள் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளன.
இரு வாரயிறுதிகளிலும் மில்லியன் கணக்கானோர் வீதிகளில் போராட்டம் நடத்தியதால் தலைமை நிர்வாகி கேரி லாம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
நேற்று நடைபெற்ற பேரணியில் இரண்டு மில்லியன் பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் போலிசார் அந்த எண்ணிக்கை 340,000ஆக இருந்தது என்றுள்ளனர்.
இதுவரை பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் மசோதா ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. ஆனால் பேரணிகள் வலிவிழந்து போனால் அரசாங்கம் மீண்டும் மசோதாவைத் தாக்கல் செய்துவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.