சாபாவுக்கு அப்பால் தென் பிலிப்பீன்ஸின் டாவி டாவி தீவுக்கூடத்திற்கு அருகில் இரு படகுகளிலிருந்த 10 மீனவர்களை அபு சயஃப் துப்பாக்கிக்காரர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக அஞ்சப்படுகிறது.
லஹாட் டத்து தம்பிசான் பகுதிக்கு அப்பால் கடலிலிருந்த அவ்விரு படகுகளும் செம்பூர்ணா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் படகுகளில் வந்த துப்பாக்கிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) அதிகாலை 2 மணியளவில் மீனவர்களைக் கடத்தியதாக நம்பப்படுகிறது.
கடத்தப்பட்ட அனைவருமே பிலிப்பினோ மக்கள் என நம்பப்படுகிறது.
முதல் படகிலிருந்த அறுவரில் நால்வரையும், இரண்டாவது படகிலிருந்த பத்து பேரில் அறுவரையும் துப்பாக்கிக்காரர்கள் கடத்திச் சென்றனர்.
தென் பிலிப்பீன்ஸின் சிடாங்காய் தீவை நோக்கி பிணையாளிகளுடன் துப்பாக்கிக்காரர்கள் தப்பிச்சென்றதாக நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவம் பற்றி தெரிந்திருந்தாலும், அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று சாபா போலிஸ் ஆணையாளர் டத்தோ ஒமார் மம்மா கூறினார்.
இரு மீன்பிடி படகுகளும் கட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் அனுமதியின்றி கடலுக்குள் சென்றதாக நம்பப்படுகிறது. துப்பாக்கிக்காரர்களிடமிருந்து தப்பிய மீதி ஆறு மீனவர்களையும் மலேசிய கடல்துறை ஆணையம் காப்பாற்றியது.

