ஒசாகா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று போலிஸ் அதிகாரியைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சந்தேகத்தின்பேரில் 33 வயது யுஜிரோ லிமொரி திங்கட்கிழமை (ஜூன் 17) கைது செய்யப்பட்டார்.
தாக்கப்பட்ட அதிகாரியின் கைத்துப்பாக்கி திருடப்பட்டிருந்தது. தோக்கியோவின் ஷினகவா பகுதியைச் சேர்ந்த பகுதிநேர ஊழியரான லிமொரி கைதானபோது, அந்தத் துப்பாக்கி அவரிடம் இருந்தது.
கொலை முயற்சி குற்றச்சாட்டை லிமொரி மறுத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 5.38 மணியளவில், சென்ரியாமா காவல்துறை நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் 26 வயது போலிஸ் அதிகாரி சுசுனொசுகி கொசி நெஞ்சில் குத்தப்பட்டார். ஐந்து தோட்டாக்கள் இருந்த அவரது துப்பாக்கியை லிமொரி திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதிகாரி கொசி சுயநினைவில்லாமல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகத் தெரிய வருகிறது. இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

