அடுத்த வாரம் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறவிருக்கும் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பு உள்ளிட்ட முக்கிய வர்த்தக விவகாரங்கள் விவாதிக்கப்படும் என ஜப்பானிய நிதி அமைச்சின் மூத்த அதிகாரி புதன்கிழமை (ஜூன் 19) தெரிவித்தார்.
இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற நிதித்துறை தலைவர்களின் சந்திப்பின்போது, வர்த்தக, உலகளாவிய அரசியல் பதற்றநிலை தீவிரமடைந்திருப்பதாகவும், இத்தகைய இடர்களுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஜி-20 நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.
வர்த்தகப் பதற்றநிலையால் உலகளாவியப் பொருளியலுக்கு நேரக்கூடிய பாதிப்பு பற்றி ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் கலந்து பேசினார்கள்.
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் உச்சநிலை மாநாட்டின்போது, வர்த்தகக் கொள்கைகள் பற்றிய முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என ஜப்பானின் அனைத்துலக விவகாரத்திற்கான துணை நிதி அமைச்சர் திரு மசட்சுகு அசகவா கூறினார்.