ஜோகூர் மாநிலத்தின் பாசிர் கூடாங்கிலுள்ள தாமான் மவார் வட்டாரத்தில் அனைத்து பாலர் பள்ளிகளையும் உயர்நிலைக் கல்வி நிலையங்களையும் வரும் வியாழக்கிழமை வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிகமான மாணவர்கள் மூச்சுத் திணறல், வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது இதற்குக் காரணம் என்று ஜோகூரின் மாநில அரசாங்கம் கூறியுள்ளது.
தாமான் நுஸா டாமாய் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஆக அண்மையில் பாதிக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தப் பள்ளியில் நேற்று குறைந்தது ஆறு மருத்துவ உதவி வாகனங்கள் காணப்பட்டதாக பெர்னாமா கூறியது.
திடீரென ஏற்பட்ட இந்தக் காற்றுத் தூய்மைக்கேட்டுக்கான காரணத்தை உறுதியாக அடையாளங்காண இயலவில்லை என்று ஜோகூர் மாநில அரசாங்கம் தெரிவித்தது. சம்பவங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியது.
நச்சுப் புகையைச் சுவாசித்ததற்காகத் தற்போது 77 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ‘த ஸ்டார்’ பத்திரிகை தெரிவித்தது.
மார்ச் மாதத்தில் ரசாயனக் கழிவுப்பொருட்கள் சுங்கை கிம் காம் ஆற்றில் சட்டவிரோதமாக வீசப்பட்டன. இதனால் 4,000 பேர் நோய்வாய்ப்பட்டனர்.