லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனின் சுரங்க ரயில் தடத்திற்குள் 91 வயது முதியவரைத் தள்ளிய ஆடவருக்கு நேற்று முன்தினம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பால் குரொஸ்லி (படம்) எனும் பெயர் கொண்ட அந்த ஆடவருக்கு தண்டனை விதிப்பதற்கு முன்பாக மனநல மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி குரொஸ்லி, 47, அந்த முதியவரை மட்டுமின்றி 23 வயது இளையர் ஒருவரையும் ரயில் தடத்திற்குள் தள்ள முயன்றார். ஆனால் அந்த இளையர் போராடித் தப்பித்துக்கொண்டார். தடத்திற்குள் கீழே விழுந்த முதியவருக்கு எலும்பு முறிவுகளும் வெட்டுக்காயங்களும் ஏற்பட்டன.
குரொஸ்லி எதற்காக இப்படி செய்தார் என்பது தெளிவாக தெரியவில்லை.
"இரவில் எனக்கு தூக்கம் போதவில்லை," என்பதே காவல்துறையினருக்கு அவர் கொடுத்த விளக்கம். அவர் புத்தி பேதலித்தவர் என அப்போது சந்தேகிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஓராண்டுக்குப் பிறகும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என விசாரணை அதிகாரி டேரன் கோஹ் தெரிவித்தார்.

