பெட்டாலிங் ஜெயா: புத்ராஜெயாவில் நேற்றுக் காலை விபத்து ஒன்றில் சிக்கிய மலேசியர்களுக்கு உதவ மாமன்னர் முன்வந்தது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
வாரந்தோறும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் மகாதீருடன் மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா, 59, சந்திப்பு நடத்துவது வழக்கம். அச்சந்திப்பிற்காக நேற்றுக் காலை சென்று கொண்டிருந்தபோது விபத்தை நேரில் கண்ட மாமன்னர் உடனடியாக தமது காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார். விபத்தில் சிக்கிய காரோட்டிக்கு மாமன்னர் உதவச் செல்வதையும் அவரது மெய்க்காப்பாளர்கள் அருகில் நிற்பதையும் காட்டும் படங்கள் 'இன்ஸ்டகிராம்' ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
விபத்தில் சிக்கிய பெண் காரோட்டியான புவான் ஜஸ்லிஸா ஜமில், 38, இலேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
தமது அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த அந்தப் பெண் காலை 7.20 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து கார் விபத்துக்குள்ளானதாக புத்ராஜெயா மாவட்ட போலிஸ் தலைமை அதிகாரி ரோஸ்லி ஹசன் கூறினார்.

