மலேசிய மாமன்னரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டில் ஜூலை 30ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பொது விடுமுறை நாட்களின் வரிசையில் இது இடம்பெறுவதாக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் இஸ்மைல் பக்கார் தெரிவித்திருக்கிறார்.
1959ஆம் ஆண்டில் பிறந்த சுல்தான் அப்துல்லா பாகாங்கைச் சேர்ந்தவர். இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி அவர் மலேசியாவின் மாமன்னராகப் பதவியேற்றார். கேஎஃப்சி உணவகத்தில் பொதுமக்களைப் போல வரிசையில் நின்று உணவு வாங்கியது, காயமடைந்த வாகனமோட்டியைத் தானே முன்வந்து நலம் விசாரித்தது உள்ளிட்ட சில சம்பவங்கள் பொதுமக்களின் மத்தியில் அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

