பாசிர் கூடாங்கில் ரசாயனத்தால் ஏற்பட்ட தூய்மைக்கேடு இகழத்தக்கது என்றும் அவமானத்திற்குரியது என்றும் ஜோகூர் சுல்தான் சாடியிருக்கிறார். இது குறித்து பதிலளிக்க மாநிலத் தலைவர்களையும் மத்திய அமைப்புகளையும் அழைத்திருப்பதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டர் தெரிவித்திருக்கிறார். இரண்டு மாதங்களுக்குள் அதே இடத்தில் இது போன்ற ஒரு சம்பவம் எப்படி நடந்தது என அதிகாரிகளிடம் கேட்கப்போவதாக அவர் கூறினார்.
"முதல் சம்பவத்திற்குப் பிறகு எல்லாம் சரியாக இருப்பதாக எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தொடர்ந்து எங்களுக்கு உத்தரவாதத்திற்கு மேல் உத்தரவாதம் அளித்தனர். ஆனால் மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஜோகூர் மக்கள் இந்தப் பிரச்சினையை மீண்டும் எதிர்நோக்குகின்றனர். இது இகழத்தக்கது, அவமானத்திற்குரியது" என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
முதல் சம்பவத்தில் சுமார் 4,000 பேர் மருத்துவமனைக்குச் செல்லவேண்டியிருந்ததாக அவர் சுட்டினார். அண்மை சம்பவத்தில் முப்பது பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

