பிரான்சின் வடமேற்குப் பகுதியான பிராஸ்ட்டில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சந்தேக ஆடவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடிய நிலையில், பள்ளிவாசலிலிருந்து ஆறுகிலோ மீட்டர் தொலைவில் அவனது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பள்ளிவாசலின் இமாம் உட்பட இருவர் காயமடைந்தனர். அந்த இமாமின் உடலில் நான்கு குண்டுகளும் மற்றவரது உடலில் இரு குண்டுகளும் பாய்ந்தன. இருப்பினும், அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிவாசலுக்கு வந்தவர்கள் தொழுகை முடிந்து வெளியேறியபோது துப்பாக்கிச்சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் சமயப் பின்னணி கொண்டதா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

