மலேசியாவின் சோதனைச் சாவடியில் கூட்ட நெரிசலைக் குறைக்க குறுகியகாலத் தீர்வுகள் செயல்படுத்தப்படும் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜோகூர் பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்பு, சுல்தான் இஸ்கந்தார் சுங்கச்சாவடி ஆகியவற்றில் இவை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்வுகள், மலேசிய அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் முடிவு செய்யப்பட்டன. மலேசியத் துணைப்பிரதமர் டாக்டர் வான் அஸிஸா அந்தக் கூட்டத்தை வழிநடத்தியதாக பெர்னாமா கூறியது.
குறுகியகால நடவடிக்கையாக, மலேசிய தானியக்க நுழைவு அனுமதி முறை மறுபடியும் செயல்படுத்தப்படும் என்றும் அதற்கான ஏலக் குத்தகைக்கு அரசாங்கம் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் என்றும் டாக்டர் வான் அஸிஸா கூறினார். சுற்றியுள்ள சாலைத் தடங்களில் வாகனங்கள் எதிர்த்திசையில் செல்வதற்கான ‘காண்ட்ரா’ தடங்களை அமைப்பது உள்ளிட்ட வேறு சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலத்தில், மலேசியாவைவிட்டு வெளியேறும் மோட்டார் சைக்கிள்களுக்கான ‘எம்பைக்’ முகப்புகளை அதிகரிக்க அந்தக் கூட்டம் முடிவு செய்தது. மோட்டார் சைக்கிள்களை ஒருமுறை மட்டும் சோதனை செய்யும் ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த சிங்கப்பூருடன் இணக்கம் நாடப்படும் என்றும் கூறப்படுகிறது.