மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, தனது ப்ரிபூமி பெர்சாத்து கட்சியில் சேர மற்ற மலாய்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு விடுத்த அழைப்பிலிருந்து பின்வாங்கிக்கொண்டார். மலாய் அரசியல்வாதிகள் புதுப்புது மலாய்-அடிப்படையிலான கட்சிகளை உருவாக்கி அந்தச் சமூகத்தின் வாக்குகளைப் பிளவுபடுத்துவதைத் தடுப்பதே தாம் கூறியதன் நோக்கம் என்று அவர் கூறினார்.
டாக்டர் மகாதீர் முன்னர் கூறிய கருத்தால் அவரது கட்சி, எதிர்க்கட்சி அம்னோவைப் போல் உருமாறும் என பக்கத்தான் ஹரப்பான் கட்சித் தலைவர்கள் அஞ்சினர். திங்கட்கிழமை அவர்களைச் சந்தித்த டாக்டர் மகாதீர் தமது கருத்துகளைத் தெளிவுபடுத்தினார்.
“நான் தவறு செய்திருப்பதாகக் கூறி என் சகாக்கள் என்னைத் திட்டினார்கள்,” என அவர் நகைச்சுவையாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“மலாய்க்காரர்கள் அரசியலில் கைதேர்ந்தவர்கள் அல்லர். ஆயினும் கட்சித்தலைவர்களாக இருக்க அவர்கள் ஆசைப்படுகின்றனர். அதனால் அவர்கள் சொந்தமாகக் கட்சிகளை உருவாக்குகின்றனர். இறுதியில் பல மலாய்க் கட்சிகள் உருவாகலாம். தற்போதைய நான்கு கட்சிகளே போதுமானது,” என்றார் அவர்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் மலாய் முஸ்லிம்கள் கொண்ட ப்ரிபூமி பெர்சாத்து, மிதவாத இஸ்லாமியக் கட்சியான அமனா நகாரா, கெஅடிலான் ராக்யாட், ஜனநாயக செயல் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மலேசியாவின் முன்னைய ஆளும் கட்சியான அம்னோவும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியான பாஸ் கட்சியும் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளாக உள்ளன.