கோலாலம்பூரிலுள்ள மஸ்ஜித் இந்தியாவை நவீன வர்த்தக வட்டாரமாக உருமாற்றும் திட்டம் ஈடேறி, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் முடிவடையவிருக்கிறது. பிரபலமான இந்த வணிக வட்டாரத்திலும் சுற்றுவட்டாரங்களிலும் பற்பல கட்டுமான, மேம்பாட்டுப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கும் கோலாலம்பூர் நகர மண்டபம், உருமாற்றத்திற்குப் பிறகு மஸ்ஜித் இந்தியா எவ்வாறு காட்சியளிக்கும் என்பதைக் காட்டும் படங்களை வெளியிட்டுள்ளது.
மஸ்ஜித் இந்தியாவும் அதன் சுற்றுவட்டாரங்களும் பாதசாரிகளுக்கு உகந்தவாறு மாற்றியமைக்கப்படுகின்றன. மேம்படுத்தப்பட்ட, கூரையுள்ள நடைபாதைகள், நீரூற்றுகள், பசுமை இடங்கள், உணவு நிலையங்களும் கடைகளும் கொண்ட புதிய கட்டடங்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன. மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தை உருமாற்றும் பணி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டதாகத் திட்டப்பணி அமலாக்க, கட்டடப் பராமரிப்புப் பிரிவின் மூத்த துணை இயக்குநர் ஹனும் அய்ன் சைனால் தெரிவித்தார்.
ஆனால், இவ்வட்டாரத்தின் தொழில் சமூகத்தினர் காட்டிய எதிர்ப்பினால் சிரமங்களை எதிர்நோக்கியதாக அவர் விவரித்தார்.
“நாங்கள் செய்ய விரும்பிய உருமாற்றத்தைப் பற்றி ஏழு ஆண்டுகளுக்குமுன் தொழில் சமூகத்தினருடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினோம். ஆனால், அது சுலபமாக இல்லை. அனைவரது எதிர்ப்பையும் நாங்கள் சமாளிக்க வேண்டியிருந்தது,” என்று சில கடை உரிமையாளர்களையும் சில்லறை வணிகர்களையும் சுட்டிக்காட்டி அவர் சொன்னார்.
“ஆரம்பக் கட்டத்தில், மேம்பாடுகளை விரும்பாத சில வணிகர்கள் நாங்கள் செய்த மேம்பாடுகளில் சிலவற்றை நாசப்படுத்தினார்கள். அது எரிச்சலும் கவலையும் அளித்தபோதிலும், நாங்கள் முயற்சியைக் கைவிடவில்லை,” என்றார் அவர்.
புதிதாக மேம்படுத்தப்பட்ட நடைபாதைகளில் சிலர் எண்ணெய் ஊற்றியதாகவும், புதிதாக நடப்பட்ட மரங்களைச் சிலர் வெட்டியதாகவும் அவர் விவரித்தார்.
“நாங்கள் மரங்களை மறுபடியும் நட்டுவைத்து, சேதங்களைப் பழுதுபார்த்தோம்,” என அவர் தெரிவித்தார். காலப்போக்கில், உருமாற்றத்தை வணிகர்கள் ஏற்கத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
“இன்று அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது. ஆக அதிகமாக எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது அமைதியடைந்து, மேம்பாடுகளைப் பாராட்டுகின்றனர்.”
ஜாலான் மலாயு சந்தையில் மே மாதம் மூண்ட தீயால் 30 கடைகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லானாய் செனியில் மூன்று மாடி கட்டடம் கட்டும் பணி கூடிய விரைவில் தொடங்கவிருக்கிறது.
கோலாலம்பூரின் ஆகப் பழமையான 156 ஆண்டுகால மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலும் புதுப்பிப்பால் பயனடையவிருக்கிறது. பள்ளிவாசலுக்கு முன்னால் பெரிய கூடாரம் அமைக்கப்படும். தொழுகைக்கு வருவோருக்கு இந்தக் கூடாரம் நிழல்தரும்.