மணிலா: தெற்கு பிலிப்பீன்சில் நேற்று உலுக்கிய 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 25 பேர் காயம் அடைந்ததாகவும் பல வீடுகள், தேவாலயங்கள் மற்றும் கட்டடங்கள் சேதம் அடைந்ததாகவும் போலிசார் கூறினர்.
மிண்டானோ தீவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட நிலநடு்க்கம் கடலுக்கு அடியில் 11.8 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானதாகவும் அதனைத் தொடர்ந்து மூன்று முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் உலுக்கியபோது அப்பகுதியில் உள்ள ஒரு போலிஸ் நிலையத்தில் கண்ணாடிக் கதவுகள் உடைந்து சிதறியதாகவும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி கீழே விழுந்து உடைந்ததாகவும் போலிசார் கூறினர். இதனால் பதற்றம் அடைந்த போலிஸ்காரர்கள் மேசைகளுக்கு அடியில் தஞ்சம் புகுந்ததாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதே போல வீடுகள் ஆட்டம் காணத் தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியதாக அந்த அதிகாரி சொன்னார்.
மேட்ரிட் வட்டார மருத்துவமனை சுவரில் வெடிப்புகள் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி அங்குள்ள நோயாளிகள் வேறு ஓரிடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். அந்நகரில் உள்ள ஒரு பழைய கார்ப்பேட்டையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பல கார்கள் சேதம் அடைந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.
நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வளையத்தில் பிலிப்பீன்ஸ் இருப்பதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆகக் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் மணிலாவின் வடகிழக்குப் பகுதியை உலுக்கிய 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் உள்ள ஒரு பேரங்காடி நிலையம் இடிந்து விழுந்தது.
இதற்கிடையே ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவுப் பகுதியிலும் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
நேற்று உலுக்கிய நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேத விவரம் பற்றிய உடனடித் தகவல் எதுவும் தெரியவில்லை.