ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் ராணுவத் தளபதி பிரபோவோ சுபியாண்டோவும் முதன் முறையாக சந்தித்துப் பேசியுள்ளனர்.
எதிர்பாராத இவர்களின் சந்திப்பு எம்ஆர்டி நிலையத்தில் நடந்திருக்கிறது. நேற்று காலை 10 மணியளவில் தென் ஜகார்த்தாவில் உள்ள எம்ஆர்டி நிலையத்தில் சந்தித்த இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் கட்டி அணைத்துக்கொண்டதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பின்னர் இவ்விருவரும் ஒன்றாக ரயிலில் பயணம் செய்திருக்கின்றனர். தென் ஜகார்த்தாவில் உள்ள லிபக் புலுஸ் எம்ஆர்டி நிலையத்திலிருந்து மத்திய ஜகார்த்தாவில் உள்ள செனயான் எம்ஆர்டி நிலையம் வரை இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தோனீசியாவின் முதல் எம்ஆர்டி ரயில் சேவையில் அந்த 14 நிமிட பயணத்தின்போது இவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் உரையாடியதாகக் கூறப்பட்டது.
இவர்களின் வரவை எதிர்பார்த்து செனயான் எம்ஆர்டி நிலையத்தில் செய்தியாளர்கள் காத்திருந்த நேரத்தில் திரு ஜோக்கோ திரு பிரபோவோவுடன் சேர்ந்து அறிக்கை வெளியிட்டதாக ராணுவ அதிகாரி கூறினார்.
அந்தச் சந்தி்ப்பு பற்றிக் கூறிய திரு கோக்கோவி, ஒரு நண்பருடனான சந்திப்பு என்று கூறியுள்ளார். தாங்கள் இருவருமே வெகு நாட்களாகவே சந்திக்கத் தி்ட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் இருவருக்கும் வேலை அதிகமாக இருந்ததால் தாங்கள் சந்திக்க முடியவில்லை என்றும் திரு ஜோக்கோவி கூறினார்.
இதற்கிடையே திரு பிரபோவோ, தேர்தலில் வெற்றி பெற்ற திரு ஜோக்கோவுக்கு இதுநாள் வரை வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தததற்குக் காரணம் அவரை நேரில் சந்திக்கும்போது வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தேன் என்று கூறினார்.
தாங்கள் இருவரும் நண்பர்கள் என்றும் ஆனால் கொள்கைகள் தேவை காரணமாக தாங்கள் போட்டியிட்டதாகவும் திரு பிரபோவோ கூறினார்.
மக்களின் நலனுக்காக தேவை ஏற்பட்டால் தாங்கள் உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார். பின்னர் அவ்விருவரும் அருகில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டதாக ராணுவ அதிகாரி கூறினார்.