கோலாலம்பூர்: கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிமின் உதவியாளர் ஒருவர், ஓரின பாலியல் காணொளிகளை மையப்படுத்தும் சர்ச்சையின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி, மற்றோர் ஆடவருடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டிருந்ததை அந்தக் காணொளி காட்டியதாகக் கூறப்படுகிறது.
கெஅடிலான் கட்சியின் பேராக் மாநிலத் தலைவராகவும் பணியாற்றும் ஃபர்ஹஷ் வாஃபா சல்வடூர் ரிசால் முபாரக்கை வேறு இரண்டு நபர்களுடன் மலேசிய போலிசார் ஜோகூர் பாருவுக்கு அருகே கைது செய்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
நீதிமன்றப் பதிவாளர் கூறியதன்படி, அம்மூவரும் விசாரணைக்காக கோலாலம்பூர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவர்.
திரு அன்வாரின் அரசியல் செயலாளராக உள்ள திரு ஃபர்ஹஷ், பாலியல் காணொளியில் இடம்பெற்றவர்களில் ஒருவர் என்ற வதந்தி பரவிக்கொண்டிருந்ததாக மலேசிய ஊடகங்கள் முன்னதாகக் குறிப்பிட்டன. தாம் அத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை என்று திண்ணமாக மறுத்த அவர், காணொளியில் இருப்பவர் அஸ்மின் அலியைப் போல் இருப்பதாக மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்தார். காணொளியில் இருப்பவர் திரு அஸ்மின் என்பது நிரூபனமானால் அவர் பதவி விலகவேண்டும் என்றும் அவர் கூறினார்.
காணொளியில் இருப்பது தாம்தான் என்று ஒப்புக்கொண்ட ஹசிக் அஸிஸ் உள்ளிட்ட மேலும் அறுவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விவகாரம் தனக்கு எதிரான அரசியல் சதி என்று திரு அஸ்மின் கூறுகிறார். டாக்டர் மகாதீர் முகம்மதிற்குப் பிறகு திரு அன்வார் பிரதமராகும் கனவு திரு அஸ்மினின் முன்னேற்றத்தால் ஆட்டங்காணலாம் என்பதால் அவருக்கு எதிராக இந்தச் சதி தொடங்கப்பட்டது என்ற அரசியல் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் காணொளியின் உண்மையைப் பற்றி அறிய மக்கள் ஆர்வமாக இருப்பதாகத் திரு அன்வார் நேற்று கூறியிருந்தார்.