அமெரிக்க நாடாளுமன்றம் அந்நாட்டின் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட “பதவிக்காலக் குற்றச்செயல்” தீர்மானத்தைப் புறந்தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரு டிரம்ப் டுவிட்டரில் குறைகூறியதை இனவாதம் எனப் பலர் கருதும் நேரத்தில், அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அல்-கிரீன், இந்தத் தீர்மானத்தைத் தொடங்கி வைத்தார்.
இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 95 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. தீர்மானத்திற்கு எதிராக 332 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.
“இதுபோல் மற்றோர் அதிபருக்கு நடக்கவிடக்கூடாது” என்று திரு டிரம்ப் இன்று டுவிட்டரில் தெரிவித்தார்.
புலம்பெயரும் குடியேறிகள் அமெரிக்காவுக்குப் புத்திமதி கூறவேண்டாம் என்றும் அமெரிக்காவில் இருக்கப் பிடிக்காதவர்கள் வெளியேறலாமே என்றும் திரு டிரம்ப் டுவிட்டரில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திரு டிரம்ப்பின் கருத்து இனவாதம் மிக்கது என்று சிலர் கருதுகையில் இந்தச் சர்ச்சை பெரிதாகியுள்ளது.
இந்த விவகாரத்தில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி, தமது கட்சியினரைக் கட்டுப்படுத்த பலவாறு முயன்றபோதும் திரு டிரம்ப்பை வெளியேற்றி ஆக வேண்டும் என்ற உறுதியுடன் அக்கட்சியினரில் பலர் செயல்படுகின்றனர்.