வாஷிங்டன்: ஹார்மோஸ் நீரிணைப் பகுதியில் ஈரானின் ஆளில்லா வானூர்தி ஒன்றை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வியாழனன்று அமெரிக்க கடற்படை கப்பலுக்கு அருகே கிட்டத்தட்ட 1000 மீட்டர் தொலைவில் ஈரானின் ஆளில்லா வானூர்தி பறந்து வந்ததால் அமெரிக்க கடற்படை தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக அதிபர் டிரம்ப் கூறினார்.
ஈரானின் ஆளில்லா வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த தகவல் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஈரான் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா வானூர்தியை ஈரான் சுட்டு வீழ்த்தியது.
வளைகுடா பகுதியில் எண்ணெய் கடத்த முயன்றதாக ஒரு வெளிநாட்டு எண்ணெய்க் கப்பலையும் அதில் இருந்த 12 பணியாளர்களையும் தாங்கள் பிடித்து வைத்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று ஈரான் தெரிவித்தது.
உலகின் முக்கிய கப்பல் தளப் பகுதியான வளைகுடா பகுதியில், கடந்த மே மாதம் முதல் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டிவந்தது.
இந்த அண்மைய சம்பவங்கள் வளைகுடா பகுதியில் மீண்டும் ராணுவ மோதல்கள் நடக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. வியாழனன்று நடந்த தாக்குதல் பற்றி வெள்ளை மாளிகையில் விவரித்த திரு டிரம்ப், ஹார்மோஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகில் ஈரானின் ஆளில்லா வானூர்தி பறந்ததாகவும் இது கப்பலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என பலமுறை எடுத்துக்கூறியும் அந்த ஆளில்லா வானூர்தி விலகிச் செல்லவில்லை என்றும் கூறினார்.
அதனால் தற்காப்பு நடவடிக்கையாக அந்த வானூர்தி உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டது’’ என்று அவர் மேலும் விளக்கினார். அனைத்துலக கடல் பகுதியில் சென்ற கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தியள்ளது என்றும் அந்த வரிசையில் இதுவும் ஒன்று என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
ஈரான் பிடித்துவைத்துள்ள எண்ணெய்க் கப்பலையும் அதன் சிப்பந்திகளையும் உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா கடும் தடைகளை விதித்தது முதல் வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
ஓமன் வளைகுடா பகுதியில் கடந்த மே, ஜூன் மாதங்களில் இரு எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரானே என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
அமெரிக்காவின் ஆளில்லா உளவு வானூர்தி கடந்த ஜூன் மாதம் ஈரானிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே அதனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.