தைப்பே: ஹாங்காங்கில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை இம்மாதம் சுற்றி வளைத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் தைவானில் அடைக்கலம் நாடும் எண்ணத்துடன் அங்கு சென்றுள்ளதாக ஆப்பிள் டெய்லி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் 30 பேர் ஏற்கெனவே தைவான் சென்று சேர்ந்துவிட்டதாகவும் இன்னும் சுமார் 30 பேர் தைவானுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அந்த ஹாங்காங் நாளேடு தெரிவித்தது.
அந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அடையாளம் தெரியாத சிலர் உதவுவதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
தைவானுக்கு தப்பிச் சென்றவர்கள் கடந்த ஜூலை முதல் தேதி ஹாங்காங் நாடாளுமன்றக் கட்டடத்தை சுற்றி வளைத்து முற்றுகையிட்ட போராட்டக்காரர் களில் ஒரு பகுதியினர் என்றும் அந்த நாளேடு தெரிவித்தது.
அவர்களுக்கு தற்போது உதவி வருபவர்கள் இது தொடர்பில் தாங்கள் தைவானின் நிர்வாக மன்ற அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
தைவானின் தேசிய குடிநுழைவு ஏஜன்சியிடமிருந்து முறையாக அடைக்கலம் நாடுவதற்கான விண்ணப்பங்கள் எதுவும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று அந்த மன்றத்தின் துணைத் தலைவர் சியூ சூய் செங் கூறியுள்ளார்.
அத்தகைய விண்ணப்பங்கள் தங்களுக்கு கிடைத்தால் தற்போதைய விதிமுறைகளுக்கு ஏற்ப அவற்றை தைவான் நிர்வாக அதிகாரிகள் கையாளுவர் என்றும் அவர் சொன்னார்.
இந்நிலையில் தைவான் அதிபர் சாய் இங் வென், மனித உரிமைகள் அடிப்படையில் ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தைவானில் அடைக்கலம் கொடுப்பது குறித்து தமது நிர்வாகம் ஆலோசிக்கும் என்று கூறியுள்ளதாக தைவானிய ஊடகத் தகவல்கள் கூறின.