பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் அறுவர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கட்சியின் துணைத் தலைவரும் மலேசிய பொருளியல் விவகாரத் துறை அமைச்சருமான அஸ்மின் அலி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பாலியல் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், காணொளியில் இருப்பது அவர்தான் என நிரூபிக்கப்பட்டால் திரு அஸ்மின் அலி, தமது அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டும் என்று திரு அன்வார் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ உறுப்பினர்கள் 64 பேரில் 23 பேர் திரு அஸ்மினுக்கு ஆதரவாகக் கூட்டறிக்கை வெளியிட்டிருந்ததோடு, திரு அன்வாருக்கும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், திரு அஸ்மினின் முதன்மை ஆலோசகரான காலித் ஜாஃபர், திரு அன்வார் அரசியலில் இருந்தே ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, மொத்தமுள்ள 14 மாநிலங்களில் ஆறு மாநிலங்களின் பிகேஆர் கட்சித் தலைவர்கள் திரு அன்வாரின் பின்னால் உறுதியாக நிற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
"திரு அன்வார் தலைமையேற்று நாட்டை வழிநடத்தச் செல்ல வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்க கடப்பாடு கொண்டுள்ளோம்," என்று கெடா மாநில பிகேஆர் தலைவர் ஜொஹாரி அப்துல் கூறினார்.
அத்துடன், போர்ட் டிக்சனில் நேற்று இரவு நடக்கவிருந்த கட்சியின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் திரு அன்வாருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 14 மாநிலங்களின் பிகேஆர் தலைவர்களும் ஆதரவு அறிக்கையில் கையெழுத்திடுவர் என்பது கடவுளின் விருப்பம் என்றும் அவர் சொன்னார்.
பிரதமர் மகாதீர் முகம்மதுக்குப் பின் திரு அன்வார் மலேசியப் பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
இந்நிலையில், தமக்கு எதிரான கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்வதாக திரு அன்வார் கூறினார்.
அதே நேரத்தில், இணக்கமான, ஒற்றுமையுடன் கூடிய ஒரு கட்சியைத் தாமே வழிநடத்த வேண்டிய தேவையுள்ளது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாலியல் காணொளி வெளியானதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறிய திரு அன்வார், தலைமைப் பதவியில் இருக்கும் ஒருவரே அதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும் சொன்னார்.