மலேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரத்தில் பிகேஆர் கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி சம்பந்தப்படவில்லை என்று போலிஸ் தலைவர் (ஐஜிபி) அப்துல் ஹமீது படோர் வெளியிட்ட அறிக்கையை பிகேஆர் கட்சி ஏற்றுக்கொள்வதாக அக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொளியை விநியோகித்ததில் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் ஈடுபட்டதாகக் கூறப்படுவது குறித்து நேற்று கருத்துரைத்த திரு அன்வார், ‘‘இதில் கட்சி உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பது சட்டப்படி நிரூபணமானால், கட்சி அரசமைப்பின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிகேஆர் கட்சி ஒருபோதும் தயக்கம் காட்டாது,’’ என்று கூறினார்.
இந்தக் காணொளி விவகாரம் குறித்து போலிஸ் அதன் விசாரணையை முடிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் திரு அன்வார் கேட்டுக்கொண்டார்.
‘‘கீழ்த்தரமான அரசியலை பிகேஆர் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன்,’’ என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பிகேஆர் கட்சியின் மூன்று நாள் ஓய்வுத்தளச் சந்திப்புக்கு மத்தியில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட திரு அன்வாருடன் கட்சியைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்களும் இருந்தனர்.
குற்றச்சாட்டிலிருந்து திரு அஸ்மின் விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறதா என திரு அன்வாரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஐஜிபியின் அறிக்கையை நேர்மறையான ஒன்றாக கட்சி கருதுவதாகக் குறிப்பிட்டார்.
‘‘அஸ்மின் இந்தக் காணொளியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்த தொடக்க விசாரணையில் முக அடையாளத்தை வைத்து அவருக்கு எதிராக ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
‘‘எனினும், இந்தக் கட்டத்தில் நாங்கள் எந்தவித முடிவுக்கும் வந்துவிட விரும்பவில்லை. போலிஸ் அதன் விசாரணையை முடிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்,’’ என்று திரு அன்வார் கூறினார்.
இந்த விவகாரத்தில் மலேசியாவின் அடுத்த பிரதமர் எனக் கூறப்படும் திரு அன்வாருக்கும் மலேசியப் பொருளியல் விவகார அமைச்சரான திரு அஸ்மினுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு உள்கட்சி பூசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிகேஆர் கட்சியில் சச்சரவைத் தீர்த்துக்கொண்டு தேசிய விவகாரங்களில் கவனம் செலுத்துமாறு மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கேட்டுக்கொண்டார்.