ஓரின பாலியல் சர்ச்சையில் தன்னைச் சிக்கவைத்த காணொளி ஒன்று இணையத்தில் பரவியதற்குக் காரணமானவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார். ஆயினும் இந்த விவகாரத்தை போலிசார் தொடர்ந்து விசாரிப்பதால் அந்நபரின் அடையாளத்தை வெளியிடப்போவதில்லை என்று அவர் நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறினார்.
காணொளி வெளியான முதல் நாளிலிருந்தே இதற்குக் காரணமானவர்கள் தமது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகப்பட்டதாக அவர், சிறப்புத் தொழுகை நிகழ்ச்சி ஒன்றுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
கெஅடிலான் ராக்யாட் கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின், கட்சியின் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்ல அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம்முடன் தொடர்ந்து ஒத்துழைக்கப்போவதாகக் கூறினார்.

