பிரிட்டனின் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவராகத் திரு பொரிஸ் ஜான்சன் இன்று தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அவருக்கு மூன்றே மூன்று மாதங்கள் உள்ளன.
திரு ஜான்சனும் அவருக்கு எதிராகப் போட்டியிடும் திரு ஜெரமி ஹன்ட்டும் கடந்த ஒரு மாதமாக பிரிட்டன் முழுவதிலும் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளுக்காகப் பரப்புரைகளை நடத்தி வருகின்றனர்.
வாக்களிப்பு சிங்கப்பூர் நேரப்படி நேற்று நள்ளிரவு முடிவடைந்தது. முடிவுகள் சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை அறிவிக்கப்படும். இதன் வெற்றியாளர், திருமதி தெரேசா மேயிடமிருந்து பிரதமர் பதவியை ஏற்பார்.
திருமதி மேயின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றி ஓராண்டுக்கு முன்னர் பதவி விலகிய திரு ஜான்சன், இந்த வாக்களிப்பில் வெற்றியடைவார் என பல்வேறு முன்னோட்டக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.