மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் காணொளி விவகாரத்தை அரசியல் சதியாகக் கருதுவதாகக் கூறும் அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது, இதனால் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இரண்டு ஆடவர்கள் பாலியல் செயல்களில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளிகள், குறிப்பிட்ட ஒருவரின் வெற்றிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதற்காகவே பரப்பப்பட்டுள்ளதாக டாக்டர் மகாதீர் தமது தனிப்பட்ட வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
“சூழ்ச்சியால் என்னை வைத்து காரியம் சாதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதிலும் சாக்கடை அரசியல் மூலம் தீய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள முயல்பவர்களால் நான் எந்த முடிவுக்கும் வரப்போவதில்லை,” என்று டாக்டர் மகாதீர் அந்தப் பதிவில் எழுதியுள்ளார். தாம் வர்ணிக்கும் நபர்கள் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
திரு அஸ்மினின் பதவிக்குத் தற்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாக உள்ளது.
கெஅடிலான் ராக்யாட்டின் துணைத்தலைவர் திரு அஸ்மினுக்கும் தலைவர் திரு அன்வார் இப்ராஹிம்முக்கும் இடையே பிரதமர் பதவிக்கான போட்டி இருப்பதாக அரசியல் வட்டாரத்தினரிடையே கிசுகிசுக்கள் ஒலிக்கின்றன. திரு அஸ்மினுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகத் திரு அன்வார் தெரிவித்தபோதும் திரு அஸ்மினின் ஆதரவாளர்கள் முக்கியமாகச் சந்தேகப்படுவது அவரைத்தான்.