அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தனது மூன்று வயது மகளைக் கொன்ற தாயாருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமிக்குள் இருக்கும் ‘பேய்களை விரட்டுவதற்காக’ அவளது தாயார் வெப்பமிகுந்த கார் ஒன்றுக்குள் தனது மகளைப் பத்து மணி நேரமாகத் தன்னந்தனியே விட்டார்.
மையா என்ற அந்தச் சிறுமியின் மரணம் ஜூன் மாதத்தில் உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்பில் ஏஞ்சலா பாக்கின் என்ற அந்தத் தாயார் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவருக்குக் கடந்த வெள்ளிக்கிழமை தண்டனை விதிக்கப்பட்டது.
பாக்கினைத் திருமணம் செய்யவிருந்த உன்ட்வான் ஸ்மித்தும் இந்தச் சம்பவத்தின் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டில் இந்தத் தம்பதியர் ஆர்கன்சா மாநிலத்திலிருந்து கலிஃபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தனர். வீடு இல்லாத அவர்கள் தங்கள் காரிலேயே தங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2017ஆம் ஆண்டில் அவர் பலமுறை மையாவை அதிக வெப்பமிகுந்த சூழல்களுக்கு உட்படுத்தியுள்ளனர். அந்தச் சிறுமியிடமிருந்து ‘காமாந்தகப் பிசாசுகளை’ அகற்ற தாங்கள் இவ்வாறு செய்ததாகத் தம்பதியர் போலிஸ் விசாரணையின்போது தெரிவித்தனர். காரின் பின்னிருக்கையில் கம்பளத்தால் போர்த்தப்பட்ட மையா உயிரிழந்ததை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதி செய்தனர்.