மலேசிய அதிகாரிகள், கொல்லப்பட்ட பயங்கரவாதி முகம்மது வாண்டி முகம்மது ஜேடாயின் மனைவியைத் திரும்பக் கொண்டுவர முயன்று வருகின்றனர். ஒன்பது மாதங்களுக்கு முன்னர், அவ்விருவருக்கும் பிறந்த மூன்று மகன்களும் குண்டுவெடிப்பில் இறந்ததை அடுத்து, அந்தப் பெண் சிரியாவிலிருந்து மலேசியாவுக்குத் திரும்ப விரும்புகிறார்.
சிரியாவின் ஹஜின் நகரில் நிகழ்ந்த இந்தக் குண்டுவெடிப்பால் அவ்விருவரும் தங்கியிருந்த வீடு இடிந்து தரைமட்டமானது. வீட்டுக்குள் இருந்த அந்தச் சிறுவர்கள் மாண்டனர். அவர்கள் ஒரு வயதுக்கும் மூன்று வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
குழந்தையின் தாயார் 30 வயது மதிக்கத்தக்க நூர் மஹ்முதா அகமது, குண்டுவெடிப்பில் பிழைத்துக்கொண்டதாக மலேசியாவின் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரி அயூப் கான் மைடின் பிச்சை ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையிடம் தெரிவித்தார்.
மலேசியாவுக்குத் திரும்ப விரும்புவதாகத் தனது குடும்பத்தினரிடம் அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார். தங்களை மீண்டும் தாயகத்திற்கு வர அனுமதிக்குமாறு கேட்கும் 39 மலேசியர்களில் மஹ்முதாவும் ஒருவர். அந்த 39 பேரில் பெரும்பாலானோர் பெண்களாகவும் பிள்ளைகளாகவும் உள்ளனர். ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக 65 மலேசியர்கள் சிரியாவுக்குள் நுழைந்திருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.