மணிலா: பிலிப்பீன்சில் நேற்று ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களில் குறைந்தது 8 பேர் உயிரிழந்த தாகவும் சுமார் 60 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
அவ்விரு நிலநடுக்கங்களும் நேற்று காலை ஏற்பட்டதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறினர்.
முதல் நிலநடுக்கம் அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சுமார் 7 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் உலுக்கியதாகவும் ஆய்வு மையம் குறிப்பிட்டது.
நிலநடுக்கத்தின்போது பல வீடுகள் ஆட்டம் கண்டதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்ததாக குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். குடியிருப்பாளர்கள் பலர் தெருக்களில் தஞ்சம் அடைந்ததாகவும் அவர் சொன்னார்.
நிலநடுக்கத்தின்போது பல வீடுகள் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் தேசிய பேரிடர் நிர்வாக மன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி சொன்னார்.
இடிபாடுகள் அகற்றப்பட்டு வரும் வேளையில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார். முதல் நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் பலர் வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நிலநடுக்கத் தின்போது ஒரு தேவாலயத்தின் பெரும் பகுதி இடிந்து விழுந்ததாக போலிசார் கூறினர்.
பிலிப்பீன்சில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

