பெய்ஜிங்: தைவானுக்கு அருகேயுள்ள கடற்பரப்பில் சீன ராணுவம் இந்த வாரம் பயிற்சியில் ஈடுபடப்போவதாக அந்நாட்டு கடற்துறை பாதுகாப்புப் பிரிவு நேற்று தெரிவித்தது. தைவான் சுதந்திர நாடாக அறிவிக்கப்படும் முயற்சியில் இறங்கினால் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள சீனா தயங்காது என்று சில நாட்களுக்கு முன் அந்நாடு அறிவித்திருந்தது.
இந்த வாரம் ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த சீனாவின் கடற்துறை பிரிவு, எந்த மாதிரியான பயிற்சி, அந்தப் பயிற்சியில் எந்தப் படை பங்குபெறும் என்ற விவரங்களை சீனா தெரிவிக்கவில்லை. இருப்பினும் தைவானின் மேற்குப் பகுதி மற்றும் குவாங்டோங், ஃபுஜியன் வட்டார கடற்பகுதியில் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஸெங்ஜியாங் கடலோரப் பகுதிகளிலும் தைவானின் வடகிழக்குப் பகுதியிலும் திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை மாலை வரை பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து தனித்து குடியாட்சி முறையில் செயல்பட்டு வரும் தைவானை, எங்கள் படையின் வலுகொண்டு சீனாவுக்குக் கீழ் கொண்டுவருவோம் என்று ஒருபோதும் கூறியதில்லை என்று சீனா தெரிவித்தது.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே தைவானைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் 'ஐலண்ட் என்சர்க்கிள்மெண்ட்' என்னும் ஆகாய பயிற்சியுடன் போர்க்கப்பல்களையும் அனுப்பி பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
தைவானின் பாதுகாப்பு, வட்டாரப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தைவான் அப்பகுதியில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
தைவானின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கையை எதிர்கொள்வதற்கு நாட்டின் ஒட்டு மொத்த படையையும் தயார்நிலையில் உள்ளதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனாவின் அச்சுறுத்தலால் தைவான் ஆண்டுதோறும் அதன் ராணுவப் பயிற்சியைத் தொடர்ந்து மே மாதங்களில் நடத்தி வருகிறது.
கடந்த வாரம் சீனா வெளியிட்ட ஓர் அறிக்கையில், சீனாவில் இருந்து தைவானைப் பிரிக்க நினைத்தால் போரில் ஈடுபட சீனா ஒருபோதும் தயங்காது என்று சூளுரைத்திருந்தது. தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவது உலக நாடுகளின் பாதுகாப்பு நிலைத்தன்மைக்கு ஊறு விளைவிப்பதாகும் என்று சீனா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

