ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்: நாளை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு

ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்: நாளை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு

2 mins read

ஹாங்காங்கில் நேற்று மீண்டும் ஒரு வாரஇறுதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் நேற்று ஒன்பதாவது வார இறுதியை எட்டியது. ஆயிரக்கணக்கானவர்கள் மோங்காக் வட்டாரத்தில் ஒன்று திரண்டு அரசாங்க எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பினர்.

குறிப்பிட்ட சில குற்றங்களில் கைது செய்யப்படுவோர் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரிக்க வகை செய்யும் ஹாங்காங் அரசின் மசோதாவை எதிர்த்து ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

போலிசார் அதிகப்படியான அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும் குண்டர் கும்பல் தாக்குதலில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் காப்பாற்ற போலிஸ் தவறிவிட்டதாகவும் போராட்டத்தை முன்னின்று நடத்துவோர் குறைகூறுகின்றனர்.

நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட பகுதி மிகவும் குறுகலானது என்பதால் போலிசார் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தப்பிச் செல்வது கடினம் என்று இருபது வயதான பல்கலைக்கழக மாணவரான ஐவன் என்பவர் செய்தியாளர்களிடம் அச்சம் தெரிவித்தார்.

இந்தப் போராட்ட இயக்கம் இவ்வாண்டின் இறுதி வரையில் தொடரும் என்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.

தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த மோங்காக் வட்டாரம் பொருட்கள் வாங்க பிரபலமான பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அந்தப் பகுதியில் ஒன்று

திரண்டனர். பெரும்பாலானவர்கள் கறுப்பு நிற உடை அணிந்திருந்தனர். மஞ்சள் அல்லது வெள்ளை நிறத் தொப்பியுடன் அவர்கள் காணப்பட்டனர்.

எதிர்ப்பாளர்களில் சிலர் சீன அரசாங்கத்தின் கொடியை கம்பத்திலிருந்து இறக்கினர். மேலும் சிலர் தங்களது கைகளில் அமெரிக்கக் கொடியை ஏந்தியவாறு சென்றனர்.

"ஹாங்காங் பெருமையை மீட்டெடுப்போம். புரட்சிக்கான நேரம் இது," என்னும் முழக்கங்களை கேன்டனிஸ் மொழியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர். போர்ட்லாண்ட் ஸ்திரீட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மோங்காக்கில் தொடங்கிய

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தாய் கோக் சுயி பகுதியில் உள்ள செரி ஸ்திரீட்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சிலர் போலிசின் எச்சரிக்கையை மீறி அனுமதிக்கப்படாத பகுதியை நோக்கி ஆக்ரோஷத்துடன் சென்றதால் பதற்றம் நிலவியது.

ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கம் நடந்து வரும்போதிலும் நாளை திங்கட்கிழமை ஹாங்காங் முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதனால் வர்த்தகர்கள் கவலையடைந்து உள்ளனர்.

போலிசுக்கு ஆதரவான போட்டி ஆர்ப்பாட்ட ஊர்வலமும் நேற்று விக்டோரியா பார்க் வட்டாரத்தில் நடத்தப்பட்டது. ஹாங்காங், சீன கொடிகளை அவர்கள் ஏந்தி இருந்தனர். "கறுப்புச் சட்டை அணிந்த குண்டர்களைப்போல அல்லாமல் உண்மையான ஹாங்காங்வாசிகள் நாங்கள்," என்று அவர்கள் கூறினர்.