'லெகிமா' புயல்: வடதிசை நோக்கிச் சென்ற 30 பேரைப் பலிவாங்கியது

'லெகிமா' புயல்: வடதிசை நோக்கிச் சென்ற 30 பேரைப் பலிவாங்கியது

1 mins read

ஸிஜியாங்: சீனாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பெரும் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30க்கு உயர்ந்ததாகவும் 18 பேர் காணவில்லை என்றும் அந்நாட்டின் அரசு ஊடகமான 'சிசிடிவி' தெரிவித்துள்ளது.

ஸிஜியாங் மாநிலத்தின் கடற்கரையோர நகரங்களைப் புரட்டியெடுத்த 'லெகிமா' என்ற அந்தப் புயல், வடக்குத் திசையை நோக்கி நகர்வதால், அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளைச் சமாளிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

நேற்று முன்தினம் அந்த மாநிலத்தைத் தாக்கிய 'லெகிமா' புயல், 34,000க்கும் அதிகமான வீடுகளையும் சுமார் 173,000 ஹெக்டர் பயிர்களையும் சேதப்படுத்தியதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் 14.57 பில்லியன் யுவான் (S$2.85 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது. மேலும், ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு சீனாவைத் தாக்கிய ஒன்பதாவது புயலான 'லெகிமா' மீண்டும் தாக்கக்கூடும் என்பதால் ஷான்டோங் மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. அத்துடன், மேலும் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படலாம் என்று அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு இயற்கையாக உருவான ஓர் அணை, கனமழையால் இடிந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

சாலைகள், தண்ணீர் மற்றும் மின்சார வசதிகளைப் பழுதுபார்க்க அவசரநிலைப் பிரிவுகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஸிஜியாங் மற்றும் ஜியாங்சு மாநிலங்களிலிருந்தும் ஷாங்காய் நகரிலிருந்தும் ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.