மலேசிய இந்துக்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக இந்தியாவைச் சேர்ந்த சமய போதகர் ஸாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இப்போது மலேசியா பெற்றிருக்கும் சிறப்புகளுக்கு இந்திய சமூகத்தினர் அளித்த அளப்பரிய பங்களிப்பும் தியாகமும் காரணம். “எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி அவர்களை அவமதிக்கும் வகையில் ஸாகிர் நாயக் கருத்து வெளியிட்டுள்ளார்.
“வெளிநாட்டினர் தங்களுக்குக் கிடைத்திருக்கும் நிரந்தரவாசத் தகுதியை நாட்டில் இன, சமய பதற்றத்தை உருவாக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்துவதை மலேசிய அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோத்தா பாருவில் அண்மையில் உரை நிகழ்த்திய ஸாகிர் மலேசியாவில் இருக்கும் இந்துக்களை இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களோடு ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்பட்டது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களோடு ஒப்பிடுகையில் மலேசியாவில் இருக்கும் இந்துக்கள் நூறு விழுக்காடு உரிமைகளை அனுபவிப்பதாக அவர் குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவித்தன. அத்துடன் மலேசியாவில் உள்ள இந்துக்கள் பிரதமர் மகாதீர் முகமதுவைக் காட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது அதிக அன்பு செலுத்துவதாக நாயக் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் குற்றம் தொடர்பில் ஸாகிரை தமது நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய அரசாங்கம் விண்ணப்பம் அளித்தாலும் ஸாகிரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பப்
போவதில்லை என்று வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா இதற்கு முன தெரிவித்திருந்தார். பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களின் தொடர்பிலும் ஸாகிருக்கு எதிரான விசாரணையில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஸாகிர் ஒரு அழையா விருந்தாளி என்றும் அவரை திருப்பி அனுப்புவதில் சிக்கல்கள் உள்ளதாகவும் கடந்த மாதம் துருக்கி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது டாக்டர் மகாதீர் தெரிவித்திருந்தார்.
ஸாகிரின் தீவிர கருத்துகள் நாட்டின் இன, சமய உறவுகளுக்கு மிரட்டலாக இருந்தாலும் வேறு எந்த நாடும் அவரை ஏற்கத் தயாராக இல்லை என்பதால் மலேசியாவிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது கடினமாக உள்ளது என்றும் மலேசிய பிரதமர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.