ஹாங்காங்: ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்
கள் போராட்டத்தைத் தொடர்வதற்காக ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்திற்கு நேற்று திரும்பிவந்தனர்.
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள் பதிவு செய்யும் இடத்திற்கு முன்பு நேற்று நூற்றுக்கணக்கான ஆர்ப்பட்டக்காரர்கள் திரண்டதால் பதிவுச் சேவை நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். அத்துடன் விமான நிலையத்திலிருந்து புறப்படக்கூடிய அனைத்து விமானச் சேவைகளும் நேற்று 2வது நாளாக நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் அனைவரும் விரைவாக விமான நிலைய கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்ததும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஹாங்காங் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியதாக விமான நிலையம் தெரிவித்திருந்தது. முதல் நாள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட 200 விமானங்களைத் தவிர மற்ற விமானங்களின் சேவை வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
பயணிகள் பதிவு செய்து கொள்ளும் இடத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் நேற்று மதியம் விமான நிலையத்தில் பயணிகள் வந்திறங்கும் இடம் மற்றும் பயணிகள் புறப்பட்டுச் செல்லும் இடத்தில் சுமார் 1,500 ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர்.
பயணப்பெட்டிகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் தள்ளுவண்டிகள் மற்றும் தடுப்புகளைக் கொண்டு பயணிகள் புறப்பட்டுச் செல்லும் வழிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்தனர். இதனால் ஹாங்காங் விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
திங்கட்கிழமை நடந்த போராட்டத்திற்குப் பிறகு ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் அந்த விமான நிலையத்திற்கு வரும் அல்லது அங்கிருந்து புறப்படும் 200 விமானங்களின் சேவைகளை செவ்வாய்க்கிழமை ரத்து செய்வதாக கெத்தே பசிபிக் நிறுவனம் அறிவித்தது.
ஹாங்காங்கில் திங்கட்கிழமை நடந்த போராட்டத்தால் மொத்தம் ஒரு கைக்குழந்தை உட்பட 810 பயணிகள் பாதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனப் பேச்சாளர் கூறினார். ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பத்தாவது வாரமாக நீடிக்கிறது.
இந்நிலையில் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் ஹாங்காங் கலவர பூமியாக மாற வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

